4லட்சம் கோடி ரூபாய் லாபம்

இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சாதகமான சூழலால் முதலீட்டாளர்களுக்கு 4லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் 9லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் , ஆயிரத்து 6 புள்ளிகள் உயர்ந்து 80ஆயிரத்து 218 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 289 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து328 புள்ளிகளாகவும் வணிகம் நிறைவுற்றது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்கள் பெரியளவில் லாபத்தை பதிவு செய்தன. ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எச் சிஎல் டெக்னாலஜீஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் குறிப்பிடத்தகுந்த சரிவை கண்டன
உலகளாவிய பதற்ற சூழல் காரணமாக பாதுகாப்பு தளவாட நிறுவனங்களின் பங்குகள் ஒரே நாளில் 5 விழுக்காடு வரை உயர்ந்தன. உலோகம், ரியல் எஸ்டேட், மருந்துத்துறை, மற்றும் பொதுத்துறை வங்கி நிறுவன பங்குகள் அதிகபட்சமாக 3 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. ஒரு கிராம் தங்கம் 8ஆயிரத்து940 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம் 71 ஆயிரத்து 520 ரூபாயாக இருந்தது. . வெள்ளி விலை 111 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான ஜிஎஸ்டி மற்றும் கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரம் உள்ளிட்டவையும் நகையின் தொகையுடன் சேர்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்…