வீட்டில் இருந்து வேலை பார்த்தா பதவி உயர்வு இல்லிங்கோ..
![வீட்டில் இருந்து வேலை பார்த்தா பதவி உயர்வு இல்லிங்கோ..](https://mp-12660.b-cdn.net/wp-content/uploads/2024/03/Work-from-home-employees-will-not-get-promotions.webp)
அமெரிக்காவைச் சேர்ந்த டெல் நிறுவனம் தனது பணியாளர்களில் வீட்டில் இருந்து பணியாற்றுவோருக்கு பதவி உயர்வு இல்லை என்று அறிவித்து அதிர வைத்திருக்கிறது. பாதி நேரம் வீட்டிலும் பாதி நேரம் ஆபிசுக்கும் செல்லும் ஹைப்ரிட் மாடல் தற்போது பல நிறுவனங்களில் அமலில் இருக்கிறது. விரைவில் இதுவும் காலியாகி கொரோனாவுக்கு முன்பு இருந்ததைப் போல முழுநேர அலுவலக பணிதான் தேவை என்று பல நிறுவனங்கள் அடம்பிடிக்கின்றன. திறமையான பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவது படிப்படியாக குறைந்து அலுவலகம் திரும்புவது அதிகரித்துள்ளது. மெட்டா,அமேசான், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றுவோர் அலுவலகம் வரவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பணியாளர்களை மறைமுகமாக அழுத்தத்தையும் அளித்திருக்கின்றனர். கொரோனாவுக்கு பிறகு பல அலுவலகங்களில் வீட்டில் இருந்து பணியாற்றும் முறையே முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. அலுவலக தரவுகள் வெளியே சென்றுவிடக்கூடாது என்பதற்காக பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை மீண்டும் அலுவலகத்துக்கு அழைத்து வருகின்றனர்.
வீட்டில் இருந்தே பணியாற்றுவோருக்கு புரோமோஷன்கள், புதுப்புது வாய்ப்புகள் மறுக்கப்பட்டும் வருகின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும் புதிதாக வேலைக்கு வருவோர் மட்டும் அலுவலகங்களில் இருந்து பணியாற்றும் நிலையில், பலரும் கலவையான ஹைப்ரிட் முறையில் வேலைபார்க்கவே விரும்புகின்றனர். அலுவலகத்துக்கு வரப்பிடிக்கவில்லை என்ற ஒற்றை வார்த்தையால் பலரும் வீட்டில் இருந்து பணியாற்றுவதால் அதனை தவிர்த்து அனைவரையும் அலுவலகம் வரச்சொல்லும் முறையைத்தான் பல பாஸ்களும் விரும்புகின்றனர். அதே நேரம் மனிதவளத்தின் உரிமைகளையும் பார்க்கவேண்டும் என்கிறார்கள் ஆர்வலர்கள். உங்களுக்கு வேலை முடிந்தால் போதும் என்ற நிறுவனங்கள் பணியாளர்களை எங்கிருந்தாலும் வேலைவாங்கிக்கொள்ளும் என்றும் மற்றொரு தரப்பினர் கவலை தெரிவிக்கின்றனர். இந்த சூழல் நிலையை எட்ட சில காலம் தேவைப்படும் என்றும் மனிதவள நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.