என்ன நடக்கிறது மெர்கன்டைல் வங்கியில்?..
தூத்துக்குடியை அடிப்படையாக கொண்டு இயங்கும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவிலும் குறிப்பிடத்தகுந்த வங்கியாக வலம் வருகிறது. இந்த வங்கியில் அண்மையில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் உலகளவில் கவனத்தை ஈர்த்தது. அதாவது தனிநபர் ஒருவரின் வங்கிக்கணக்கில் 9ஆயிரம் கோடி ரூபாய் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டுவிட்டது. எப்படி இத்தனை பெரிய தொகை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாதாரண குடிமகனின் வங்கிக்கணக்குக்கு வந்தது என்பது இதுவரை பெரிய குழப்பமாக உள்ளது. மேலும் தனது வங்கிக் கணக்கில் விழுந்த பணத்தில் 21 ஆயிரம் ரூபாயை அந்த நபர் தனது நண்பருக்கு அனுப்பி சோதித்து இருக்கிறார்.இந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக மெர்கன்டைல் வங்கியின் சிஇஓவான கிருஷ்ணன் அறிவித்துள்ளார். தனது சொந்த காரணங்களுக்காக விலகுவதாக கிருஷ்ணன் தெரிவித்தாலும் பின்னணியில் இந்த சம்பவம்தான் இருக்கிறது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். குறிப்பிட்ட இந்த வங்கியில் என்ன நடக்கிறது, வங்கியில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக விளக்கமளிக்க மெர்கன்டைல் வங்கிக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அளித்திருந்தனர். இந்த சூழலில் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களால் மெர்கன்டைல் வங்கிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.