இசைவு தெரிவித்த டாடா மோட்டார்ஸ்…
![இசைவு தெரிவித்த டாடா மோட்டார்ஸ்…](https://mp-12660.b-cdn.net/wp-content/uploads/2024/06/infographics0.png-850x560.webp)
வணிக வாகனங்களை புதிதாக களமிறக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு இசைவு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே டாடா மோட்டார்ஸில் வணிக பிரிவு உள்ள நிலையில்,புதிய பிரிவுக்கு டிஎம்எல் வணிக வாகனப்பிரிவு என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பற்றி இந்திய பங்குச்சந்தைகளிலும் முறையான அறிவிப்பை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாக உடைக்கப்பட்டு ஒரு பிரிவு வணிக வாகனங்களாகவும், மற்ற ஒரு பிரிவு பயணிகள் வாகனப்பிரிவாகவும் பிரிக்கப்பட்டது. வளர்ச்சியை இலக்காக கொண்டு இந்த பிரிவை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செய்திருந்தது. இந்நிலையில் வணிக பயன்பாட்டு வாகன வர்த்தகம் மற்றும் அது தொடர்பான முதலீடுகள் ஒரே குழு செய்யும். அதே நேரம் பயணிகள் வாகனம், மின்சார வாகனங்கள், ஜாகுவார் லேண்ட் ரோவர் உள்ளிட்டவற்றின் முதலீடுகள் அது ஒரு தனி குழுவாக இயங்கும் என்றும் டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த சூழலில் டிஎம்எல் வணிக வாகனப்பிரிவு என்ற தனிப்பிரிவு, கவனத்தை ஈர்த்திருக்கிறது.